சென்னையில் கஞ்சா விற்பனை மற்றும் மாமூல் வசூல் தொடர்பான முன்விரோதம் காரணமாக, ஜாமீனில் வெளியே வந்த ரவுடியை காரில் கடத்தி தாக்கிய வழக்கில் 2 பெண்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை அன்னை சத்யா நகரைச் சேர்ந்த சதீஷ்குமார் (33), பட்டாபிராம் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் குதிரை சவாரி தொழிலுடன் கஞ்சா விற்பனையிலும் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அதேபோல் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பாலாஜி, வினோத் ஆகிய சகோதரர்களும் கஞ்சா கடத்தல் வழக்கில் புழல் சிறையில் இருந்தனர். சிறையிலேயே கஞ்சா விற்பனை, பணம் கொடுக்கல்-வாங்கல் மற்றும் மாமூல் வசூல் தொடர்பாக இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
ஜாமீனில் வெளியே வந்த சதீஷ்குமாரை, பாலாஜி தரப்பினர் கத்திமுனையில் காரில் கடத்திச் சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் செங்குன்றம் அருகே கார் நிறுத்தப்பட்டபோது, தாக்குதலாளர்கள் தூங்கியதை பயன்படுத்தி சதீஷ்குமார் தப்பித்து புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், மாமல்லபுரத்தில் பதுங்கியிருந்த பாலாஜி (33), வினோத் (55), தேன்மொழி (55), மோகனா (35) ஆகிய 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.













Leave a Reply