Advertisement

110ஆக உயர்த்தப்பட்ட திமுக மாவட்டங்கள்; மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

தேர்தல் தோல்விக்குப் பிறகு, கட்சியின் கட்டமைப்பில் மிகப்பெரிய அளவிலான அதிரடி மாற்றங்களையும் மறுசீரமைப்புகளையும் செய்வதற்கு திமுக தலைமை மிகத் தீவிரமான முடிவுகளை எடுத்து வருகிறது. தேர்தல் பின்னடைவைத் தொடர்ந்து, சட்டமன்றத் தொகுதி வாரியாகக் கள ஆய்வு செய்து பெறப்பட்ட அறிக்கை மற்றும் மூத்த நிர்வாகிகள் குழு ஆலோசனைகள் அளித்தன.

அதன் அடிப்படையில் கடந்த 22ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் முக்கிய விவாதங்கள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து முக்கிய 9 தீர்மானங்களை திமுக நிறைவேற்றியது. குறிப்பாக வருவாய் மாவட்டங்களை அடிப்படை இலக்காகக் கொண்டு இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற வகையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையில், கட்சியின் கட்டமைப்பு ரீதியாக 110 மாவட்டங்கள் உருவாக்கி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பேரியக்கம், கொள்கை – அமைப்புமுறை – செயல்பாடுகள் – உடன்பிறப்புகள் என்ற நான்கு அடிப்படைகளைக் கொண்டு இயங்கும் இயக்கம். இந்நான்கையும் காலங்கள் தோறும் நாம் புதுப்பித்தும், மேன்மைப்படுத்தியும், கூர்தீட்டியும், செழுமைப்படுத்தியும் வந்திருக்கிறோம். இவை அனைத்தும் கோடிக்கணக்கான உடன்பிறப்புகளின் எண்ணங்கள் அடிப்படையில்தான் அமைந்துள்ளன. அந்த அடிப்படையில், கடந்த 22.8.2026 அன்று நடைபெற்ற கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிர்வாகச் சீரமைப்புக்குத் தேவையான மிகமுக்கியமான முடிவுகளைத் தீர்மானங்களாக நிறைவேற்றி இருக்கிறோம்.

கழகம் தொடங்கப்பட்ட நாள் முதல், இதுவரையில் 15 முறை கழக அமைப்பு ரீதியாகத் தேர்தல் நடத்தி, நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்துள்ளோம். இதன் தொடர்ச்சியாக 16-ஆவது கழக அமைப்புத் தேர்தலை நடத்திடவும், பல்வேறு அமைப்பு ரீதியாக நிர்வாக மாற்றங்கள் மேற்கொள்ளப்படவும் பல தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் மிக முக்கியமானது மாவட்டக் கழகங்கள் குறித்த தீர்மானமாகும். அதில், தற்போதுள்ள மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கையை 77-இலிருந்து 110-ஆக அதிகரித்து, எந்தெந்தத் தொகுதிகள் எந்தெந்த மாவட்டங்களில் இடம்பெற வேண்டும் என்பதை வரையறுப்பதற்கான அதிகாரம் கழகத் தலைவரான எனக்கு வழங்கப்பட்டது.

இதனையடுத்து, கழக மறுசீரமைப்புக் குழு வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில், கழக முன்னணியினருடன் கலந்தாலோசித்து, தமிழ்நாட்டில் உள்ள தொகுதிகளை 110 மாவட்டங்களாகப் பகுத்து அறிவிக்கிறேன்.

அதில், அதிகமான மக்கள் தொகை இருப்பதன் காரணமாகச் சோழிங்கநல்லூர் தொகுதி மட்டும் தனி மாவட்டமாக அறிவிக்கப்படுகிறது. அறிவிக்கப்பட்டுள்ள இந்த 110 மாவட்டக் கழகங்களில் தற்போதுள்ள மாவட்டக் கழகச் செயலாளர்கள், தலைமைக் கழகத்தால் அனுப்பப்படும் பிரதிநிதியின் முன்னிலையில் மாவட்டச் செயற்குழுவைக் கூட்டி, மேற்குறிப்பிடப்பட்டுள்ள கழக மாவட்டங்களின் அடிப்படையில், நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வட்ட, கிளை அமைப்புகளைப் பிரிப்பதற்கான பரிந்துரைகளை 15 நாட்களுக்குள் வழங்கிட வேண்டும் என்றும், தலைமைச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையிலும், கழக மறுசீரமைப்புக்குழு மூலம் வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, கழக அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *