சென்னை: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு மற்றும் புதுவையில் மேற்கொள்ள இருந்த 2 நாள் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் நாளை (ஜூலை 25) காலை 11.20 மணியளவில் கர்நாடக மாநிலம் ஹூப்ளியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வர திட்டமிடப்பட்டிருந்தார். பின்னர் சென்னை விமான நிலையத்திலிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஜூலை 26ஆம் தேதி காலை 11.30 மணியளவில் புதுச்சேரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் வந்து, அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லி திரும்பவும் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், டெல்லியில் கடந்த சில நாட்களாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மேற்கொண்டு வரும் தொடர் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதால், பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களைக் கருத்தில் கொண்டு அமித்ஷாவின் தமிழ்நாடு–புதுச்சேரி பயணம் ரத்து செய்யப்பட்டதாக டெல்லியில் இருந்து சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவரது வருகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நிர்வாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பயணம் மீண்டும் எப்போது திட்டமிடப்படும் என்பது குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை












Leave a Reply