உத்திர பிரதேச மாநிலத்தில், ரசாயன உரங்களின் பயன்பாட்டைத் தவிர்த்து இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பசு கோமியத்தைக் கொள்முதல் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
இதன்படி, விவசாயிகளிடம் இருந்து பசு கோமியம் லிட்டர் ரூ.10க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. முதற்கட்டமாக புலாந்த்சகர் மாவட்டத்தில் உள்ள சியானா வட்டத்திற்குட்பட்ட நர்சேனா பகுதியில் சுமார் 15 கிராமங்களில் இந்த திட்டம் சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில், கிராமப்புற மக்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் இந்த கோமியத்துடன், சில மூலிகைகளைக் கலந்து இயற்கை உரம் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகள் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன் மூலமாகப் பால் தராத வயது முதிர்ந்த பசுக்களை வளர்த்துவரும் குடும்பத்தாருக்கும் வருமானம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில், 300 கிராமப்புற பெண்கள் பங்கேற்கும் இந்த திட்டத்தில், கோமியத்தைச் சேகரித்து வழங்கும் சேமிப்பார்களுக்கு ஊக்கத்தொகையாக லிட்டருக்கு ரூ.2 கமிஷன் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, எதிர்க்கட்சிகள் இந்த திட்டத்திற்குக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன. அந்த வகையில், சமாஜ்வாதி கட்சி இந்த திட்டம் என்பது ஒரு மிகப்பெரிய ஊழல் என்று விமர்சித்துள்ளது. மேலும், கோமியத்தைக் கொள்முதல் செய்யும் இந்த திட்டம் என்பது முற்றிலும் மக்களை ஏமாற்றும் வேலையாகும். இது வரவிருக்கும் தேர்தலுக்கு நிதி திரட்டுவதற்கு பாஜக அரசு நடத்தும் ஒரு மோசடி திட்டம். இயற்கை விவசாயம் என்ற பெயரில் அரசு பணம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளது.













Leave a Reply