ஜூன் 15 முதல் 30 வரை தமிழகம் முழுவதும் TNPDCL நடத்திய திடீர் சோதனையில் 76 மின்திருட்டு வழக்குகள் மற்றும் 24 மின்சார விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ரூ.96.7 லட்சம் இழப்பீடு வசூலிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 15 நாட்களில் 76 மின்திருட்டு வழக்குகள்… ரூ.96.7 லட்சம் இழப்பீடு வசூலித்த TNPDCL!
ஜூன் 15–30 வரை திடீர் சோதனை; 24 மின்சார விதிமீறல்களும் கண்டுபிடிப்பு – ரூ.4.78 லட்சம் சமரசக் கட்டணம் செலுத்தி போலீஸ் நடவடிக்கையை தவிர்த்த நுகர்வோர்
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) ஜூன் 15 முதல் ஜூன் 30 வரை மாநிலம் முழுவதும் மேற்கொண்ட திடீர் சோதனையில் 76 மின்திருட்டு வழக்குகள் மற்றும் 24 மின்சார விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையின் மூலம் ரூ.96.7 லட்சம் இழப்பீட்டுத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக கழகம் தெரிவித்துள்ளது.
சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி அமலாக்கப் பிரிவுகளின் கீழ் செயல்படும் அதிகாரிகள் சென்னை வடக்கு, சென்னை மேற்கு, சென்னை மத்திய, சென்னை தெற்கு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோயம்புத்தூர், கோயம்புத்தூர் வடக்கு, திருப்பூர், சேலம், ஈரோடு, தர்மபுரி, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், திருச்சி, தஞ்சாவூர், வேலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட மின் பகிர்மான வட்டங்களில் இந்த ஆய்வுகளை மேற்கொண்டனர்.
ஆய்வில் கண்டறியப்பட்ட மின்திருட்டு மற்றும் விதிமீறல்களுக்கு சென்னை அமலாக்கப் பிரிவு ரூ.12.45 லட்சமும், கோயம்புத்தூர் அமலாக்கப் பிரிவு ரூ.36.07 லட்சமும் கூடுதல் இழப்பீடாக விதித்தன. மதுரை மற்றும் திருச்சி அமலாக்கப் பிரிவுகள் இணைந்து ரூ.29.29 லட்சம் இழப்பீடு விதித்துள்ளன.
மொத்தமாக ரூ.98.4 லட்சம் கூடுதல் இழப்பீடு விதிக்கப்பட்ட நிலையில், அதில் ரூ.96.7 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட நுகர்வோர் ரூ.4.78 லட்சம் சமரசக் கட்டணம் (Compounding Fee) செலுத்தியதால், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் எந்த காவல் நிலையத்திலும் புகார்கள் பதிவு செய்யப்படவில்லை.
மின்திருட்டு சம்பவங்கள் குறித்து தகவல் தெரிந்தால், சம்பந்தப்பட்ட அமலாக்கப் பிரிவுகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மின்திருட்டை தடுப்பது மின் வாரியத்தின் வருவாயைப் பாதுகாப்பதோடு, நேர்மையாக மின் கட்டணம் செலுத்தும் நுகர்வோரின் நலனையும் காக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.













Leave a Reply